நடிகர் சியான் விக்ரம் நல்ல நடிகர், திறமையான கலைஞர் என்ற மாற்றுக்கருத்து யாருக்குமே இருக்க முடியாது. பல படங்களில் அதை சியான் விக்ரம் நிரூபித்திருக்கிறார். நடிகர் கமலுக்கு அடுத்தபடியாக அதிக ரிஸ்க் எடுத்து உடலை வருத்தி நடிக்கும் நடிகர் சியான் விக்ரம். இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக நடிகர் சூர்யாவும், சியான் விக்ரமும் பேசிக்கொள்வது இல்லை என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில், நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, டைரக்டர் பாலா இயக்கத்தில் பிதாமகன் படத்தில் சூர்யா, விக்ரம் நடித்தனர். இருவருமே ஹீரோக்கள். சம அந்தஸ்து உள்ள நடிகர்கள். அதற்கேற்ப படத்தில் கதை, திரைக்கதை அமைத்திருந்தார் பாலா. ஆனால் டைரக்டர் பாலாவை தனியாக சந்தித்த சியான் விக்ரம், நான்தான் சீனியர். அதனால் படத்தில் சூர்யா காட்சிகளை குறைத்துவிடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.
அதற்கு பாலா, அது எனக்கு தெரியும் என்று சொன்னவர், இதுகுறித்து சூர்யாவிடமும் கூறிவிட்டார். அதிர்ச்சியடைந்த சூர்யா, அந்த விஷயம் குறித்து விக்ரமிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் படம் முடியும் வரை சினிமா டயலாக் தவிர, விக்ரமிடம் கூடுதலாக எதுவும் பேசாமல், ஒதுங்கியே இருந்துவிட்டார் சூர்யா. இதனால் கோபப்பட்ட சியான் விக்ரம், சூர்யாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தன்னை வைத்து படம் எடுக்க வரும் டைரக்டர்கள், தயாரிப்பாளர்களிடம் ஜோதிகா தான் எனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என கண்டிசன் போட்டிருக்கிறார்.
அப்போது சூர்யா, ஜோதிகா காதலர்களாக இருந்தனர். சிவக்குமார் சம்மதத்துக்காக திருமணத்துக்கு காத்துக்கொண்டு இருந்தனர். இந்த சூழலில், விக்ரம் போட்ட கண்டிசன் குறித்து சூர்யாவிடம் சொல்லி இருக்கிறார் ஜோதிகா. அதன்பிறகுதான் விக்ரமை சூர்யா, ஜோதிகா இருவருக்குமே பிடிக்காமல் போனது. அதனால்தான் விக்ரமை, தங்களது திருமணத்துக்கு கூட சூர்யா, ஜோதிகா அழைக்கவில்லை, என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.