நண்பா, உடனே கிளம்பி வாங்க.. சென்னை மக்களுக்காக ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்த விஜய்..

By Nanthini

Updated on:

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பலத்த காற்று மற்றும் தொடர் கனமழை காரணமாக சென்னையில் வசித்து வந்த மக்கள் பலரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கான்கிரீட் வீடுகள் மற்றும் அப்பார்ட்மெண்ட் வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் பலரும் சிக்கிக் கொண்டனர். இவர்களுக்கு அரசு பல உதவிகளை செய்து வரும் நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்து வருகிறார்கள்.

   

அது மட்டுமல்லாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வரும் நிலையில் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக இயங்க தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் புயல் மற்றும் கனமழை காரணமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வருகிறார்கள். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மீட்க உதவி கேட்டு நிறைய குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்தி கொண்டு உதவிகளை செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vijay இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@actorvijay)

author avatar
Nanthini