தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது.
அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது. அதன் பின்னர் அவர் நடித்த சில படங்கள் அவரின் தனித்துவ நடிப்பை கோடிட்டு காட்டின. அதன் பின்னர் அவரின் மார்க்கெட் உச்சத்தை நோக்கி சென்றது. செந்திலும் அவர் கூட்டணி அமைத்து உருவாக்கிய லாரல் ஹார்டி வகைக் காமெடி அழியாப் புகழை அவர்களுக்குப் பெற்றுத் தந்தது.
கவுண்டமணி எல்லா வகையிலும் மற்ற நடிகர்களிடம் இருந்து வித்தியாசமானர். ஊடகங்களை வெகு அரிதாகதான் சந்தித்து பேட்டிக் கொடுத்துள்ளார். யாராவது பேட்டிக்காக நச்சரித்தால் “தம்பி இங்க பாரு… என்னோட வேல நடிக்குறது… உன்னோட வேல படத்த பாக்குறது. அதோட முடிச்சுக்குவோம்.. இந்த பேட்டி எல்லாம் தேவையில்லாதது…” என நாசூக்காக மறுத்துவிடுவாராம்.
கவுண்டமணிக்கு ஒரு கட்டத்துக்குப் பின்னர் மார்க்கெட் போனாலும் அவர் இறங்கி வந்த மற்ற நகைச்சுவை நடிகர்களோடு உப்புக்கு சப்பாணியாக நடிக்கவில்லை. தன்னுடைய இமேஜை அப்படியே மெய்ண்டெய்ன் செய்துகொண்டு இன்னும் முக்கியக் கதாபாத்திரத்தில்தான் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கவுண்டமணி 2.0 என சொல்லப்படும் சந்தானம் அவரை தன்னுடைய படங்களில் நடிக்கவைக்கவேண்டும் என முயற்சி செய்தார். ஆனால் அதற்கு கவுண்டமணி இணங்கவில்லை என சொல்லப்படுகிறது. அது ஏன் என்பது குறித்து கவுண்டமணி மற்றும் சந்தானம் ஆகியோருக்கு நெருங்கிய நண்பரான நடிகரும் கதாசிரியருமான ஈரோடு சௌந்தர் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
அதில்” சந்தானம் கவுண்டர் கொடுப்பதில் செம்ம கில்லாடி. அவர் யாரைப் பார்த்து கவுண்டர் கொடுக்கிறாரோ அவர்களுக்கே சிரிப்பு வந்துவிடும். அதனால்தான் கவுண்டமணி உன்னோடு நடிக்க மாட்டேன் என்கிறார் என்று நான் சந்தானத்திடம் சொன்னேன். அதற்கு அவர் “அண்ணே தலைவர போய் நான் கலாய்ப்பானே, அவர்தான் நமக்கெல்லாம் வாழ்க்க கொடுத்தவர்” எனக் கூறினாராம்.
