தமிழ் சினிமாவில் ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இவர் நடிகராக மட்டுமல்லாமல் கதையாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் என பன்முக திறமைகளோடு திரையுலகில் வலம் வந்து கொண்டுள்ளார். தற்பொழுது இவர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன்2’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவ்வப்பொழுது சர்ச்சைகளில் சிக்கும் இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விட சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானதே அதிகம். இந்நிலையில் நடிகர் சித்தார்த் நடிப்பில், அருண்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’சித்தா’.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேளைகளில் நடிகர் சித்தார்த் மும்முரமாக இறங்கியுள்ளார். அதன்படி நேற்று இவர் பெங்களூருவில் ‘சித்தா’ படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அரங்குக்குள் நுழைந்த கன்னட அமைப்பினர் தகராறில் ஈடுபட்டு, சித்தார்த் முன்பு சூழ்ந்துகொண்டு முழக்கம் எழுப்பினர். அப்போது அவர்கள், ‘காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பந்த் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இதெல்லாம் தேவையா? உடனே பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்துங்கள்’ என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நன்றி தெரிவித்துக்கொண்டு நடிகர் சித்தார்த் மேடையிலிருந்து இறங்கிச் சென்றார்.
இந்நிகழ்ச்சி குறித்து இணையத்தில் முதன்முறையாக நடிகர் சித்தார்த் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, முதன்முறையாக ஒரு தயாரிப்பாளராக, என்னுடைய திரைப்படம் திரையரங்குகளில் வெளிவருவதற்கு முன்பாகவே பலருக்கும் அதை திரையிட்டுக் காட்டினேன். அதேபோல பெங்களூருவிலும் அப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், காவிரி போராட்டத்துக்கு மதிப்பளித்து நாங்கள் அனைத்தையும் ரத்து செய்தோம். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் அதையும் தாண்டி ஒரு நல்ல படத்தைப் பற்றி அங்கிருந்தவர்களுடன் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது’ என்று கூறியுள்ளார்.

