தமிழ் சினிமாவில் தற்போது முன்னாடி காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சந்தானம். லொள்ளு சபா இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு பார்ட் 1 மற்றும் பார்ட் 2 ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ராகவா லாரன்ஸ் ஸ்டைலில் ஹாரர் காமெடியை கையில் எடுத்து சந்தானமும் வெற்றியை ருசித்துள்ளார். டிடி ரிட்டன்ஸ் என்ற தலைப்பில் இறுதியாக வெளியான படத்தை ராம் பாலாவுக்கு பதிலாக பிரேம் ஆனந்த் இயக்கியிருந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தையும் அவரே இயக்கியுள்ளார்.

சந்தானம், செல்வராகவன் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த திரைப்படம் வருகின்ற மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் ஆர்யா தன்னுடைய நண்பர் சந்தானத்துக்காக ஒரு படத்தை தயாரித்து உள்ளார். ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் இணைந்து இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் சொகுசு கப்பலில் எல்லாம் சூட் செய்து உருவாக்கியுள்ளனர். நண்பனோட பணம் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க என்று விமர்சகர்களிடம் கோரிக்கை வைத்த சந்தானம் இந்த படத்தில் youtube விமர்சனராகவே நடித்துள்ளார்.

இப்படியான நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைபெற்ற நிலையில் அந்த நிகழ்ச்சியில் மேடை ஏறி பேசிய சந்தானம், நான் ஒரு பழைய வீட்டை தன்னால் முடிந்த சக்திக்கு வாங்கி புதிதாக ரெணவண்ட் செய்யலாம் என்று பிளான் பண்ணி வச்சிருந்தேன். அந்த வீட்டுக்கு வெள்ளிக்கிழமை ஆனா என்னுடைய அம்மாவும் மனைவியும் போய் விளக்கேத்திட்டு வருவாங்க. ஒரு நாள் ஆர்யாவை என்னோட அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போனேன். அவன் உடனே வீட்டை பார்த்துட்டு என்ன மச்சான் வீடு உன் டேஸ்ட்க்கு நல்லாவே இல்ல இதை இடிச்சுட்டு புதுசா கட்டிடலாம் என்று சொன்னான்.

அதெல்லாம் வேணாம் ராசா அதுக்கெல்லாம் நிறைய செலவாகும் இதை பெயிண்ட் அடிச்சு நான் யூஸ் பண்ணிக்கிறேன் என்று சொன்னேன். ஆனா அவன் கேட்கவே இல்ல. ஒரு பிரெண்டுக்கு போன் போட்டு வீட்டை இடிச்சு அப்படியே தரைமட்டமாக்கிட்டான். நான் பயந்துட்டேன் இந்த விஷயத்தை எங்க வீட்ல சொல்லவே இல்ல. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை என்னுடைய அம்மாவும் மனைவியும் விளக்கேற்றுவதற்காக அந்த வீட்டுக்கு சென்ற சமயத்தில் வீடு தரைமட்டமாக இருந்ததால் வீடு எங்கே என்று பக்கத்து தெருவுக்கலாம் போயி தேட ஆரம்பிச்சிட்டாங்க.

அப்புறம் என்கிட்ட போன் பண்ணி இங்க இருந்த வீட்ட காணோம் என்று என்கிட்ட சொன்னதும் பேசிக்கலாம் வாங்க என்று சொல்லி நடந்தத அவங்களுக்கு புரிய வச்சேன். உடனே எங்க அம்மா படத்துல மட்டும் தான நீங்க ரெண்டு பேரும் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருப்பீங்க நிஜத்திலும் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா என்று சொல்லி திட்டுனாங்க. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் அந்த அளவுக்கு ஆர்யாவும் நானும்நண்பர்கள் என்று சந்தானம் அந்த நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.
