தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையிலான விவாகரத்து வழக்கு, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தன் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த ரவி மோகன், நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே, வழக்கு விசாரணை முடியும் வரை தன் மாதாந்திர செலவுகளுக்காக ரவி மோகன் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் (இடைக்கால பராமரிப்புத் தொகை) வழங்க வேண்டும் என ஆர்த்தி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ரூ. 40 லட்சம் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதற்குப் பதிலாக, வழக்கு முடியும் வரை ஆர்த்திக்கு மாதம் ரூ. 3 லட்சம் ஜீவனாம்சமாக ரவி மோகன் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வழக்கில் மற்றொரு முக்கிய முடிவாக, தங்களது மகன்கள் ஆரவ் மற்றும் அயான் ஆகியோரைத் தந்தை ரவி மோகன் சந்திப்பதற்கு நீதிமன்றம் முழு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, ஆர்த்தி தன் மகன்களைத் தன்னைச் சந்திக்க விடாமல் தடுப்பதாகவும், பள்ளிக்குக் கூட பாதுகாவலர்களுடன் அனுப்பி வைப்பதாகவும் ரவி வேதனை தெரிவித்திருந்தார். மேலும், மகன்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கிய தகவலைக் கூட ஆர்த்தி மறைத்துவிட்டதாகவும், பதறியடித்து ஓடியும் பிள்ளைகளைப் பார்க்க விடவில்லை என்றும் ரவி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார். தற்போது நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவின் மூலம், தன் அன்பு மகன்களைச் சந்திப்பதில் ரவி மோகனுக்கு இருந்த தடைகள் நீங்கி, அவருக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது.
