தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.
1980 கள் வரை அவர் வில்லனாகவும், கமல், சிவகுமார் மற்றும் ஜெய் சங்கர் ஆகியோரின் படங்களில் இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்து வந்தார். முரட்டுக் காளை உள்ளிட்ட சில படங்களின் வெற்றியால் அவர் வசூல் மன்னனாக சூப்பர் ஸ்டாராக மாறினார்.
நடிப்பு ஆசையில் பெங்களூருவில் இருந்து வந்த ரஜினிக்கு இங்கு பலரும் உதவியுள்ளனர். அப்படி உதவிய ஒருத்தரின் குடும்பத்துக்கு பின்னாளில் ரஜினி செய்த உதவி பற்றி நடிகர் விஜய் ஆதிராஜ் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “பிலிம்சேம்பர் நடத்திய நடிப்புப் பயிற்சியில் சேரதான் ரஜினி, பெங்களூருவில் இருந்து சென்னை வந்தார். அந்த கல்லூரியின் பிரின்ஸ்பாலாக இருந்தவர் என்னுடைய தந்தையின் நண்பர் ராம்தாஸ்.
அவர்தான் சிவாஜி ராவ் கெய்க்வாட்டுக்கு சீட் கொடுத்த தன்னுடைய வீட்டில் தங்கிக்கொள்ள இடமும் கொடுத்தார். அப்படி உதவிய அவர் ரஜினி நடிகர் ஆன பின்னர் திடீரென அகால மரணமடைந்தார். அதனால் ரஜினி சார் அவரது குடும்பத்தையே தத்தெடுத்துப் பார்த்துக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் அவரின் மகள்களுக்கு எல்லாம் நல்ல மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்துகொடுத்தார். அவர்கள் எல்லாம் இப்போது அமெரிக்காவில் சந்தோஷமாக வாழ்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
