நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் எதிர்நீச்சல் தொடரின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். நடிகர் மாரிமுத்து கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். பிரபல இயக்குனர்களான வசந்த், சீமான், மணிரத்தினம், எஸ்.ஜே சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் பரியேறும் பெருமாள், சண்டைக்கோழி, வாலி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் இறப்பு குறித்து அவரது தாய் கூறியதாவது, கஷ்டப்பட்டு படித்த மாரிமுத்து சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதாக தனது தாயிடம் தெரிவித்தார். பல்வேறு இன்னல்களைக் கடந்து சினிமாவில் நடிகர் மாரிமுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்ற மாரிமுத்து தனது தாயை சந்தித்து மெட்ராசுக்கு வருமாறு அழைத்தார். தான் கட்டி வரும் புது வீட்டிற்கு கண்டிப்பாக வரவேண்டும் என தனது தாயிடம் கூறியுள்ளார். தனது மகன் மாரடைப்பால் உயிரிழந்த செய்தியை கேட்ட மாரிமுத்துவின் தாய் கடைசியாக மெட்ராசுக்கு வா ஆத்தா என ஆசையாக கூப்பிட்ட தனது மகன் இல்லாமல் போனதை நினைத்து அழுதார்.

