காதலும் கடந்து போகும், காலா ,விக்ரம் வேதா போன்ற பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். அதன் பின்னர் அவர் ஜெய் பீம் படத்தில் நடித்த ராஜாக்கண்ணு கதாபாத்திரம் அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சென்று அவரை ஒரு நடிகராக அங்கீகரிக்க வைத்தது. மணிகண்டன் நடிகராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார் . இவர் இயக்கிய “நரை எழுதும் சுய சரிதம்” என்ற திரைப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. அதன்பின்னர் அவர் கதாநாயகனாக நடித்த ‘குட் நைட்’ படம் பெரிய வெற்றியைப் பெற்று அவரைக் கதாநாயகன் ஆக்கியது.

அதன் பின்னர் அவர் நடித்த லவ்வர் திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இப்போது ‘குடும்பஸ்தன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலில் கலக்கி வருகிறது. இப்படியான நிலையில் சமீபத்தில் குரு சோமசுந்தரம், பா ரஞ்சித் தயாரிப்பில் இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பாட்டில் ராதா. இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இருந்தாலும் படத்தின் இயக்குனர் தினகரன் சிவலிங்கம் குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள். இப்படியான நிலையில் தினகரன் சிவலிங்கம் சமீபத்தில் அளித்த பேட்டியில், என்னுடைய அடுத்த படம் மணிகண்டனுடன் தான். அவர் குடும்பஸ்தன் படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் நானும் பாட்டில் ராதா படத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் சரியாக நேரம் அமையவில்லை. தற்போது நேரமும் அமைந்துவிட்டது ப்ரொடக்ஷன் பண்ண சரியான ஆளும் இருக்காங்க. மணிகண்டன் காலா முடித்த கையோடு இந்த கதையை கூறி அவரிடம் பண்ண வேண்டியதாக இருந்தது. அப்போ சரியான நேரம் அமையல. இன்னும் சில நாட்களில் இந்த புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பும் தொடங்க உள்ளதாக தினகரன் சிவலிங்கம் பேசியுள்ளார்.
