திரையுலகில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி, இன்று பன்முகத் திறமை கொண்ட கலைஞராகவும், சிறந்த அப்பாவாகவும் மிளிர்பவர் நடிகர் மாதவன். தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் முத்திரை பதித்த இவர், தனது மகன் வேதாந்தை வளர்த்த விதம் குறித்து சமீபத்தில் பகிர்ந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றன. திரையுலக வாரிசுகள் இயல்பாகவே சினிமா பக்கம் திரும்பும் சூழலில், தனது மகனை சர்வதேச தரம் வாய்ந்த நீச்சல் வீரராக உருவாக்கிய மாதவனின் அணுகுமுறை பலருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
மாதவன் தனது வளர்ப்பு முறையில் மிக முக்கியமாக கருதுவது வெளிப்படைத்தன்மை. பொதுவாகப் பெற்றோர்கள் பேசத் தயங்கும் பாலியல் பாதுகாப்பு, நன்னடத்தை மற்றும் பாலியல் கல்வி போன்ற விஷயங்களை வேதாந்திற்கு நான்கு வயதிலேயே புரிய வைக்கத் தொடங்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்ப்பது என்பது அவர்களை மூடி மறைப்பது அல்ல, மாறாக உலகத்தைப் பற்றிய புரிதலை அவர்களுக்கு முன்கூட்டியே வழங்கி, அவர்களை ஒரு முதிர்ச்சியடைந்த மனிதராக நடத்துவதே ஒரு சிறந்த தந்தையின் அடையாளம் என்பதை மாதவன் நிரூபித்துள்ளார்.
புகழின் உச்சியில் இருந்தாலும், தனது மகன் தன் நிழலில் வளரக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். வேதாந்திற்குத் தனது வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரத்தை வழங்கியதோடு, பெண்களை மதிப்பது மற்றும் புகழின் இருண்ட பக்கங்களை எதிர்கொள்வது குறித்தும் கற்றுக்கொடுத்துள்ளார். இந்தத் துணிச்சலான மற்றும் திறந்த மனப்பான்மையே வேதாந்தை விளையாட்டுத் துறையில் இந்தியாவுக்காகப் பதக்கங்களை வெல்லும் ஒரு தன்னம்பிக்கை கொண்ட இளைஞராக மாற்றியுள்ளது.
வெறும் அறிவுரைகள் மட்டுமின்றி, வேதாந்தின் ரசனையையும் மாதவன் பெருமையுடன் பகிர்ந்துள்ளார். தான் இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி’ படத்தைப் பார்த்த வேதாந்த், ‘நாட் பேட் டேட்’ (Not bad dad) என்று எளிமையாகக் கூறியதையும், அவருக்குப் பிடித்த படம் ‘யாவரும் நலம்’ என்பதையும் மாதவன் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார். சராசரி பெற்றோரின் பாதையிலிருந்து விலகி, நம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வை அடித்தளமாகக் கொண்டு மாதவன் கையாண்ட இந்த ‘பேரண்டிங்’ முறை, இன்றைய தலைமுறைப் பெற்றோர்களுக்கு ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணமாகும்.
