தமிழ் சினிமாவில் நடிகர் கருணாஸ், நந்தா படம் மூலம் லொடுக்கு பாண்டியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அம்பாசமுத்திரம் அம்பானி, திண்டுக்கல் சாரதி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அவரது மகன் கென்னி, அசுரன் படத்தில் தனுஷின் 2வது மகனாக நடித்திருப்பார். கருணாஸின் மனைவி கிரேஸ், பின்னணி பாடகி. விஜய் டிவியில், கலக்கப் போவது யாரு, நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று, வருபவர். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கருணாஸ், அவரது மனைவி கிரேஸ் இருவரும் பங்கேற்றனர். அப்போது கருணாஸ் தனது கடந்த கால அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
நாங்கள் இருவரும், 25 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம்தான் செய்துகொண்டோம். திருமணத்துக்கு முந்தின நாள், இருவரும் தியேட்டரில் டைட்டானிக் படம் பார்த்தோம். அதில் கடைசியில் ஹீரோயின் ஜேக், ஜேக் என கத்துவாள். அப்படித்தான், திருமணம் பிரச்னையில் முடித்து என்னை பார்த்து கிரேஸ் கத்துவாரோ, என்று அப்போது நான் பயந்தேன். அதேபோல், அடிதடி, வெட்டுக்குத்து என்றுதான் எங்கள் திருமணம் நடந்தது.
எனக்கு சின்ன வயதில் என் எதிர்காலம் பற்றி எதுவுமே யோசிக்க தெரியாது. பெரிதாக படிக்கவும் இல்லை. ஆனால், பார்க்கிற பெண்ணை எல்லாம் காதலிக்கிற ஆளாக தான் நான் இருந்தேன். எல்லாமே ஒன்சைடு லவ்தான். என்னை யாரும் காதலிக்க மாட்டார்கள் என்று தெரியும், ஆனாலும், சாப்பிட்டியா என்று கேட்டால் கூட, அந்த அக்கறையை காதலாக எடுத்துக் கொண்டு அந்த பெண்ணின் பின்னால், மாதக் கணக்கில் சுற்றுவேன்.
என்னுடைய காதலை எந்த பெண்ணிடமாவது சொன்னால், உங்களை அந்த மாதிரி நினைச்சு நான் பழகல என்பார்கள். 99.9 சதவீதம் பெண்கள் அப்படிதான் சொல்வார்கள். கிரேஸ்சிடம் நான் காதலை சொன்னபோது, அவரும் அப்படித்தான் சொன்னார். ஆனால், ஒரு கட்டத்தில் அவரே என்னை விரும்பி ஏற்றுக்கொண்டார் என்று கூறி இருக்கிறார் கருணாஸ்.