![gm kumar - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/05/gm-kumar.jpg)
CINEMA
நடிகையின் மீதான காதலால் என் சினிமா கேரியரை இழந்தேனா?… இயக்குனர் ஜி எம் குமார் அளித்த எமோஷனல் பதில்!
தமிழ் சினிமாவில் தற்போதிருக்கும் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் ஜி எம் குமார். இவர் வெயில், பாலாவின் அவன் இவன் மற்றும் தாரை தப்பட்டை ஆகிய படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். பாலாவின் அவன் இவன் படத்தில் இவர் நிர்வாணமாக நடித்து ரசிகர்களை உருக வைத்திருப்பார்.
நடிகராக அறியப்பட்ட ஜி எம் குமார் ஒரு நடிகர் மட்டுமில்லை. அவர் ஒரு கதையாசிரியர் மற்றும் இயக்குனரும் ஆவார். காக்கிச்சட்டை படத்தை லிவிங்ஸ்டனோடு இணைந்து எழுதியவர் ஜி எம் குமார். பாக்யராஜின் கதை இலாகாவில் முக்கியப் புள்ளியாக இருந்த இவர் அவரின் வெற்றி படங்களில் பணியாற்றியவர்.
வெற்றிகரமான கதாசிரியராக வலம் வந்த ஜி எம் குமார், அறுவடை நாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். இந்த படத்தில் பிரபு, பல்லவி மற்றும் ராம்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்த படம் வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர் பிக்பாக்கெட், இரும்பு பூக்கள் மற்றும் உருவம் ஆகிய படங்களை இயக்கினார். அதன் பின்னர் அவர் பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.
தன் படங்களில் நடித்த பல்லவியைக் காதலித்த ஜி எம் குமார், அவரோடு இணைந்து வாழ்ந்தார். அந்த காதலால்தான் அவரின் சினிமா வாழ்க்கை காலியானது என சொல்லப்படுவது உண்டு. அதுபற்றி ஒரு நேர்காணலில் பேசியுள்ள அவர் “நான் பல்லவியுடனான காதலை மிகவும் ரசித்தேன். அந்த காதலால் என் சினிமா வாழ்க்கை போனதாக சொல்வார்கள். ஆனால் எனக்கு அதுபற்றி கவலையில்லை. அதன் பின்னர் எனக்கு காடுகளின் மீது ஆர்வம் ஏற்பட்டு 6 ஆண்டுகள் கொடைக்கானலில் போய் தங்கிவிட்டேன். நான் திரும்பி வந்த போது சினிமாவே மொத்தமாக மாறிவிட்டது.” எனக் கூறியுள்ளார்.
ஒரு கட்டத்தில் பல்லவி இவரை பிரிந்து அமெரிக்காவில் போய் செட்டில் ஆகிவிட்டார். அதன் பின்னர் ஜி எம் குமார் நடிகராக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் கூட தனது பழைய காதலி பல்லவியை அமெரிக்கா சென்று ஜி எம் குமார் பார்த்து அந்த புகைப்படத்தை பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.