மதுரையில் இருந்து சினிமா ஆசையால் சென்னைக்கு வந்து, ஒரு நடிகராக பெரிய வெற்றியை பெற்றவர் கேப்டன் விஜயகாந்த். நல்ல நல்ல படங்களில், நல்ல கேரக்டர்களில் நடித்து மிகப்பெரிய நடிகராக, முன்னணி நட்சத்திரமாக விஜயகாந்த் இருந்தார். ரஜினி ஸ்டைல், கமல் நடிப்பு என்ற நிலையில் இருந்த போது அதிரடி சண்டை காட்சிக்காக விஜயகாந்த் படம் பார்க்க கூட்டம் தெறிக்கும். அதே போல் ரஜினி, கமலை விட விஜயகாந்துக்கு தான் பெண் ரசிகைகள் கூட்டம் அதிகம். ஏனென்றால் அவரது படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இருக்காது. பெண்களை, தாய்மையை, அவர்களது தியாகத்தை எப்போதுமே படங்களில் உயர்வாக சித்தரிப்பவர் விஜயகாந்த்.
பெரிய நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தேமுதிக என்ற கட்சியை துவக்கி, தமிழக அரசியலில் ஒரு மாபெரும் தலைவரான உருவானார் விஜயகாந்த். திமுகவை ஓரம்கட்டி 2016 தேர்தலில் அதிக தொகுதிகளை வென்று, சட்டசபையில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தவர் விஜயகாந்த். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் கட்சி பலவீனமாகி, தோல்விகளை அதிகம் பார்த்த போது அந்த கட்சியின் முக்கிய தூண்களாகவும், முக்கிய நிர்வாகிகளாகவும் இருந்த 10க்கும் மேற்பட்டோர் திமுக, அதிமுக கட்சிகளுக்கு போய்விட்டனர் என்பதை விட விலை போய்விட்டனர் என்றுதான் கூறப்படுகிறது. அதுவும் அருண்பாண்டியனை தன் படங்களில் நடிக்க வைத்து, கட்சியிலும் வாய்ப்பு கொடுத்து உயர்த்தியவர்தான் விஜயகாந்த்.
இதுகுறித்து சமீபத்தில் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் பார்த்தசாரதி கூறுகையில், எந்நேரமும் நாங்கள் கேப்டனுக்கு துணையாக கூடவே இருப்போம். ஆயிரம் பேர் வந்தாலும் அவர்களுடன் சலிக்காமல் புகைப்படம் எடுக்க போஸ் தருவார் கேப்டன். எங்களை போன்ற நிர்வாகிகள் மீது அதிக நம்பிக்கை, அன்பு கொண்டதால் எங்களை எம்எல்ஏ வாக மாற்றினார். ஆனால் சுந்தர்ராஜன், சந்திரகுமார், சுரேஷ், நடிகர் அருண்பாண்டியன் போன்றவர்கள் தேமுதிக-வை விட்டு போன போது மிகவும் வருத்தப்பட்டார். கூடவே இருந்துக்கிட்டு, கடைசியில் இப்படி செய்துவிட்டார்களே என்று கவலையாக பேசினார். ஆனால் அதற்கு பிறகு அவர்களில் யாரையுமே அவர் சந்திக்கவில்லை. ஒருமுறை கேப்டனை விட்டு விலகிவிட்டால், மீண்டும் அவர்களை தன்னுடன் சேர்த்துக்கொள்ள கேப்டன் விரும்ப மாட்டார், என்று அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார் பார்த்தசாரதி.