பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. சந்தன மர கடத்தல் அதில் நடக்கும் அரசியலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில், தனன்ஜெயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்தில் நடிகை சமந்தா நடனமாடிய ‘ஊ சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா’ என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா, வசூலில் சாதனையும் படைத்தது. தற்போது இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி உள்ளது. இந்த பாகத்தில் நடிகர்கள் ஜெகபதிபாபு, பிரகாஷ் ராஜ் போன்றோர் புதிதாக இணைந்துள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புஷ்பா 2 படம் வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. அதோடு மட்டுமின்றி ரசிகர்களின் ஆர்வத்தையும் வெகுவாக தூண்டியுள்ளது.
இந்நிலையில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள ‘புஷ்பா 2’ படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி கொடுத்து கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல அப்படத்தின் ஆடியோ உரிமையை டீ-சீரிஸ் நிறுவனம் ரூ.60 கோடி கொடுத்து வாங்கி உள்ளதாம். இப்படி ரிலீசுக்கு முன்பே ‘புஷ்பா 2’ படம் கல்லா கட்டி வருவது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .