தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் திரையிடப்பட்ட புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் ஷோவில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா ஆகியோர் கலந்து கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அந்தப் பெண்ணின் குழந்தை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மூளை சிதைவு அடைந்து சிகிச்சை பெற்று வருகிறது. விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் சட்டசபை உறுப்பினர் அக்பருதீன் ஓவைசி ஆகியோர் அல்லு அர்ஜுன் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக போலீசார் அனுமதி மறுத்த பின்னரும் படத்தின் சிறப்பு காட்சியில் அல்லு அர்ஜுன் பங்கேற்றார் என்றும் கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்து விட்டார் என்று கூறிய பின்னரும் படம் பார்த்த பிறகுதான் புறப்படுவேன் என்று அல்லு அர்ஜுன் போலீசாரிடம் கூறியதாகவும் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். காவல் ஆணையர் வலுக்கட்டாயமாக அழைத்த போது அல்லு அர்ஜுன் புறப்பட்டார் என்று கூறிய ரேவந்த் ரெட்டி வெளியே செல்லும்போதும் காரின் மேற்கூறையை திறந்து ரோடு நடத்தினார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார். மேலும் அல்லு அர்ஜுன் கால்களை இழந்தாரா அல்லது கண்களை இழந்தாரா? அவரது இல்லத்திற்கு பிரபலங்கள் விரைந்து சென்று பார்க்க வேண்டிய அவசியம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதனைப் போலவே பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சினிமா பிரபலங்கள் அக்கறை காண்பித்தார்களா என்றும் அவர் காட்டமாக கூறியுள்ளார். தான் முதலமைச்சராக இருக்கும் வரை திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தனது மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து நடிகர் அல்லு அர்ஜுன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த சம்பவத்தில் போலீசார் உட்பட யாரையும் குற்றம் சாட்ட முடியாது. இது ஒரு துரதிஷ்டமான நிகழ்வு. தன்னைக் குறித்து பல பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. தன் நற்குணங்களுக்கு இழக்கு ஏற்படுத்தும் விதமாக பல கருத்துக்கள் கூறப்பட்டு வருவதாகவும் தன் 20 ஆண்டுகால உழைப்பு உடைந்து விட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தான் திரையரங்கிற்கு சென்றது குறித்து ஏற்கனவே திரையரங்க நிர்வாகம் மற்றும் போலீஸ் தரப்பில் இருந்து பேசி முடிக்கப்பட்டது. திரையரங்கில் இருந்து வெளியே வந்த போது ரோடு ஷோ எதுவும் நடக்கவில்லை. திரையரங்கை விட்டு வெளியேறுமாறு போலீசார் என்னிடம் கூறவில்லை. கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதாக தனது மேலாளர்கள் கூறியதால் தான் வெளியேறினேன். விபத்து நடந்தது குறித்து மறுநாள் தான் தனக்கு தெரிய வந்தது. திரையரங்கில் எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தான் இருந்தேன். விபத்துக் குறித்து முன்னரே அறிந்திருந்தால் எனது குழந்தைகளையும் அழைத்துச் சென்றிருக்க மாட்டேனா? என் மனைவியை மட்டும் அழைத்துச் சென்றேன். எந்த குழந்தைக்கும் அப்படி ஒரு நிகழ்வு நடக்க நான் அனுமதித்திருக்க மாட்டேன். சட்ட ரீதியான சிக்கல்கள் இருப்பதால் தான் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தன்னால் சென்று பார்க்க முடியவில்லை என்று அல்லு அர்ஜுன் விளக்கம் அளித்துள்ளார்.
