நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்படம் நேற்று முன்தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையிலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். நேற்று முன்தினம் வெளியான இந்த திரைப்படம் முதல் நாளில் 294 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாளில் எந்த ஒரு திரைப்படமும் இந்த வசூலை பார்த்தது கிடையாது. இந்த வாரம் இறுதிக்குள் படம் 500 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
)
சர்வதேச அளவில் புஷ்பா 2 திரைப்படம் ஆயிரம் கோடி கிளப்பில் இணையும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் பிரிமியர் ஷோ டிசம்பர் நான்காம் தேதி ஹைதராபாத்தில் சந்தியா திரையரங்கில் நடத்தப்பட்டது. இந்த ஷோவை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தியேட்டருக்கு வந்திருந்தனர். அவர்களுடன் இணைந்து பார்க்க அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் வருகை தந்தனர். படத்தை பார்ப்பதை காட்டிலும் இவர்களை பார்க்கவே ஏராளமான ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர். இந்த காட்சி இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. இதனிடையே கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். ஒரு கட்டத்தில் அவர்கள் தடியடி நடத்திய நிலையில் ரசிகர்கள் அனைத்து பக்கங்களிலும் ஓட்டம் பிடித்தனர்.

இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குடும்பத்துடன் படம் பார்க்க வந்த 35 வயதான ரேவதி மற்றும் 9 வயதான அவருடைய மகள் ஸ்ரீ தேஜா இருவரும் நெரிசலில் சிக்கி தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது இவர்கள் மீது மற்றவர்கள் ஏறி ஓடிய நிலையில் சுயநினைவை இழந்த நிலையில் இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ரேவதி முன்னதாகவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருடைய மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் இது குறித்து தற்போது பேசியுள்ளார்.

இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அந்த குடும்பத்தினருடன் தாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று உறுதி கூறியுள்ளார். இந்த சம்பவம் பட குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனால் படத்தின் கொண்டாட்டங்களில் தங்களால் பங்கேற்க முடியவில்லை என்றும் தேவதையின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக கூறி அவர் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட ரேவதியின் குடும்பத்தினருக்கு தங்கள் சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாகவும் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். புஷ்பா 2 பட குழுவினரிடம் இருந்து ரேவதியின் குடும்பத்தினருக்கு எந்த உதவியும் செய்ய தயாராக உள்ளதாக உறுதியளித்துள்ளார்.
