மதுரை மத்திய தொகுதி அஇபுதமமுக வேட்பாளர் சக்கரவர்த்தியை ஆதரித்து ஆரப்பாளையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட சசிகலா, அதிமுகவில் துரோகிகள் பெருகிவிட்டதாகக் கடுமையாகச் சாடினார். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை இதுபோன்ற சூழல் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகக் கையெழுத்திட்ட இளைஞரை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் கடத்திச் சென்றதாகப் பரபரப்புப் புகாரை முன்வைத்தார்.
சிறைவாசம் மற்றும் அரசியல் நெருக்கடிகளைக் கண்டு தான் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்று முழங்கிய சசிகலா, கடந்த 35 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இருந்து பல்வேறு சவால்களைச் சந்தித்திருப்பதை நினைவுகூர்ந்தார். “நான்கு ஆண்டுகள் சிறையில் அடைத்தால் நான் பயந்துவிடுவேன் என்று நினைத்தீர்களா?” என கேள்வி எழுப்பிய அவர், இதுபோன்ற சலசலப்புகளுக்குப் பணியமாட்டேன் என்றும், எதையும் எதிர்கொள்ளத் துணிச்சலோடு இருப்பதாகவும் ஆவேசமாகத் தெரிவித்தார்
