நடிகர் கார்த்தி, சமீபத்தில் சென்னை இன்டோர் ஸ்டேடியத்தில் கார்த்தி 25 என்ற விழாவை கொண்டாடினார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பருத்திவீரன் என்ற படத்தில், அறிமுகமானார் கார்த்தி. இவரது தந்தை சிவக்குமார், தமிழ் சினிமாவில் மிக பிரபலமான சீனியர் நடிகர். இவரது அண்ணன் சூர்யாவும், அப்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகராக இருந்தார்.

அப்போது பருத்திவீரன் என்ற முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக தன்பக்கம் திரும்பி, அனைவரது கவனத்தையும் பெற்றார் கார்த்தி. காரணம், படத்தின் கதைக்களம், நடிப்பு, படத்தின் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும் கார்த்தியை, பருத்திவீரன் என்ற கதாபாத்திரமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இதற்கு முக்கிய காரணம், அந்த படத்தின் டைரக்டர் அமீர். ஆனால், இந்த கார்த்தி 25 விழாவுக்கு, அமீரை அழைத்து கவுரப்படுத்த, நன்றி தெரிவிக்க மறந்துவிட்டார் கார்த்தி.

இதுகுறித்து சமீபத்திய ஒரு நேர்காணலில், இயக்குநர் அமீர் கூறியதாவது, அந்த விழாவுக்கு என்னை முறைப்படி அழைக்கவில்லை. பி.ஆர்.ஓ., மேனேஜர் போன்றவர்கள் போனில் அழைத்தால், அப்படி அந்த விழாவுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில், இடத்தில் நான் இல்லை.
பருத்தி வீரன் படம் தயாரிப்பு சம்பந்தமாக, தயாரிப்பாளருக்கும், எனக்கும் 17 ஆண்டுகளாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துக் கொண்டு இருக்கிறது. இந்த வழக்கு நடப்பதே பலருக்கு தெரியாது. கடந்த மாதம் கூட, இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நான் மட்டும் கோர்ட்டில் நேரில் சென்று ஆஜராகி விட்டு வந்தேன். தயாரிப்பு தரப்பில் இருந்து, அவர்கள் யாரும் ஆஜராவது இல்லை.

இதுதான் உண்மையான நிலவரம். இப்படிப்பட்ட சூழலில் அந்த விழாவில் நான் கலந்துக்கொள்ள முடியாது. யாரோ மூன்றாம் நபர் கூப்பிட்டு அந்த விழாவுக்கு போய் நின்று, யாரையும் வாழ்த்த வேண்டிய நிலை இல்லை. பருத்தி வீரன் தயாரிப்பு குறித்த வழக்கு நடக்கிற உண்மையே பலருக்கு தெரியாது என்று நினைக்கிறேன், என கூறி இருக்கிறார் இயக்குநர் அமீர்.
