கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (70). இவரது முதல் மனைவி உயிரிழந்த நிலையில், இரண்டாவது மனைவி பொன்னம்மாளுடன் (67) காட்டுக்கொட்டை பகுதியில் வசித்து வந்தார். ராமசாமியின் பேத்தி மேகலாவிற்கும், பெருக்கஞ்செடி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் திருமணம் நடந்திருந்தது. தொடக்கத்தில் இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்ற நிலையில், சதீஷ் நாளடைவில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, மேகலாவைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.
கணவரின் கொடுமை தாளாமல் மேகலா அவரைப் பிரிந்து தனது தாத்தா ராமசாமியின் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். கடந்த ஒரு வருடமாக மேகலா திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வரும் நிலையில், சதீஷ் தொடர்ந்து அவரைத் தேடி வந்து தொல்லை கொடுத்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி ராமசாமியின் வீட்டிற்குச் சென்ற சதீஷ், மேகலாவைப் பற்றி விசாரித்து முதிய தம்பதியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, “குடிபோதையில் வரும் உன்னுடன் என் பேத்தி எப்படி குடும்பம் நடத்துவாள்?” என்று ராமசாமி கண்டித்ததாகத் தெரிகிறது.
இதில் கடும் ஆத்திரமடைந்த சதீஷ், வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து ராமசாமி மற்றும் பொன்னம்மாள் ஆகிய இருவரின் தலையிலும் அடித்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். தகவல் அறிந்து வந்த கரியாலூர் காவல்துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வயது முதிர்ந்த தம்பதியினர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தலைமறைவான சதீஷைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு சேலம், ஆத்தூர், கருமந்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இறுதியில், அவர் தர்மபுரி மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் சதீஷை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், வளர்த்து ஆளாக்கிய தாத்தா, பாட்டியையே அம்மிக்கல்லால் அடித்துக் கொன்ற இந்தத் துயரச் சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கிற்கு எதிராக, தமிழக அரசு…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட 'ஆக்ரா சௌபட்டி' என்ற இடத்தில், பொழுதுபோக்கிற்கான ஜிப்-லைனிங் (Zip-lining)…
திமுகவில் மீண்டும் 'செயல் தலைவர்' பதவி கொண்டு வரப்படவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை…
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை…
தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, சட்டப்பேரவையில் விஜய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஆற்காடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்…