அரியலூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று நிலைதடுமாறி விழ இருந்த இளம்பெண்ணை, அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை (RPF) வீரர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற மெமு ரயில் அரியலூர் நிலையத்திற்கு வந்தபோது, பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். அப்போது ரயில் புறப்பட்ட நிலையில், 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்றார். எதிர்பாராதவிதமாக அவர் கைப்பிடியைச் சறுக்கி கீழே விழப் பார்த்தபோது, அங்கு பணியில் இருந்த செந்தில் என்ற பாதுகாப்பு படை வீரர் உடனடியாக அவரைப் பிடித்து ரயிலுக்குள் தள்ளி உயிரைக் காப்பாற்றினார்.
இந்த துணிச்சலான மீட்பு நடவடிக்கை அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உரிய நேரத்தில் செயல்பட்டு ஒரு உயிரைக் காப்பாற்றிய காவலர் செந்திலுக்கு உயர் அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனர். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், காவலர் செந்தில் இதேபோன்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பும் ரயிலில் இருந்து தவறி விழ முயன்ற ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளார். இந்தச் சம்பவம் ரயில் பயணிகளிடையே விழிப்புணர்வையும், அதே சமயம் பாதுகாப்பு படையினரின் அர்ப்பணிப்பையும் மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.
