நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே, தனது 6 மாதக் குழந்தையை வயிற்றில் கட்டிக்கொண்டு தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த சிவபாலனின் மனைவி காவியா (20), தனது மாமியார் செந்தமிழ்ச்செல்வி மற்றும் மாமனார் பழனித்துரை ஆகியோரின் தொடர் தொல்லை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். தற்கொலைக்கு முன்பாக, மாமனார் மற்றும் மாமியார் தன்னிடம் சண்டையிடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட காவியா, தனது கணவர் நல்லவர் என்றும், தனது சாவுக்கு மாமனார், மாமியாரே காரணம் என்றும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு தனது 6 மாதப் பெண் குழந்தையைத் துப்பட்டாவால் வயிற்றில் கட்டிக்கொண்டு அருகில் உள்ள கிணற்றில் குதித்த காவியாவின் உடல், தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டது. வாய்மேடு போலீசார் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாமியார் செந்தமிழ்ச்செல்வியைக் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளரான மாமனார் பழனித்துரையைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
