100 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்…! தமிழ்நாட்டில் போலீஸ் காலடி கூட படாத ஊர் எது தெரியுமா…? அங்கு இத்தனை கட்டுப்பாடுகள் இருக்கா…?

By Devi Ramu on மார்கழி 20, 2025

Spread the love

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே உள்ள சக்கிமங்கலம் பகுதியில் ‘ஒத்தவீடு’ என்ற தனித்துவமான கிராமம் ஒன்று அமைந்துள்ளது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலத்திலிருந்து வந்த மூன்று குடும்பங்களால் உருவாக்கப்பட்ட இந்த ஊர், இன்று வரை பல வியக்கத்தக்க கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வருகிறது.

இந்த கிராமத்தில் எந்த ஒரு பொது இடத்திலோ அல்லது சுவர்களிலோ அரசியல் விளம்பரங்கள் செய்யவோ, நோட்டீஸ் ஒட்டவோ யாருக்கும் அனுமதி கிடையாது. தங்கள் ஊரின் தூய்மையையும் அமைதியையும் காக்க முன்னோர்கள் விதித்த இந்த விதியை, இளைய தலைமுறையினரும் இன்று வரை ஒரு பாரம்பரியமாகப் போற்றிப் பாதுகாத்து வருகின்றனர்.

   

இக்கிராமத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இங்குள்ள மக்கள் தங்களுக்குள் ஏற்படும் குடும்பப் பிரச்சனைகள் அல்லது பொதுவான மோதல்களைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்வதே இல்லை. ஊரின் நுழைவாயிலில் உள்ள அரச மரத்தடியில் பெரியவர்கள் முன்னிலையில் பேசி, சுமுகமாகப் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்கின்றனர்.

   

இதனால் நூறு ஆண்டுகால வரலாற்றில் இதுவரை ஒரு போலீஸ்காரர் கூட விசாரணைக்காக இந்த ஊருக்குள் நுழைய வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை. ஒற்றுமையே பலம் என்பதை உலகுக்குக் காட்டும் இந்த கிராமத்தின் கட்டுப்பாடு, நவீன காலத்திலும் மாறாமல் இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.