இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும், செர்பிய மாடல் நடாசா ஸ்டான்கோவிக்கும் அண்மையில் தங்களது விவாகரத்தை அறிவித்த நிலையில், நடாசா தனது மகன் அகஸ்தியாவுடன் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, அவர் பரோடாவிற்குச் சென்று ஹர்திக் பாண்டியாவின் குடும்பத்தினரைச் சந்தித்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். பிரிவிற்குப் பின்பும் ஹர்திக் குடும்பத்தினருடன் அவர் கொண்டுள்ள இந்த சுமூகமான உறவு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் திருமண முறிவுக்குப் பிறகு தனது சொந்த நாடான செர்பியாவிற்குச் சென்றிருந்த நடாசா, தற்போது தனது மகனுக்காகவும், சில தொழில்முறை ஒப்பந்தங்களுக்காகவும் இந்தியா வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் குருணால் பாண்டியா மற்றும் அவரது குடும்பத்தினருடன் நடாசா நேரத்தைச் செலவழிக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
மேலும் தம்பதியினர் பிரிந்தாலும், குழந்தையை வளர்ப்பதில் இருவரும் இணைந்து செயல்படுவதுடன், குடும்ப உறவுகளுக்கு மதிப்பளிப்பது ஆரோக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவின் ரசிகர்கள் இந்தச் சந்திப்பை நேர்மறையான கண்ணோட்டத்துடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
