சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் வரும் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் முதல் அதிகாரபூர்வ மாநாடு இதுவாகும்.தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசின் மக்கள் நலத்திட்டங்களின் செயல்பாடு, சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் மாவட்ட அளவிலான சவால்கள் குறித்து முதலமைச்சர் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கமாகும். தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக முதலமைச்சர் விஜய் தலைமையில் இந்த உயர்மட்ட மாநாடு நடத்தப்பட உள்ளதால் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்த இருநாள் மாநாட்டில் மாநிலம் முழுவதிலுமுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சித் திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு சூழல், முதலீட்டு வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி மற்றும் நிர்வாக மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. புதிய அரசின் நிர்வாக முன்னுரிமைகள் மற்றும் எதிர்கால செயல் திட்டங்களை அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் ஒரு முக்கிய அமர்வாக இந்த மாநாடு அமையவுள்ளது.
