திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே, குடும்பத் தகராறில் பெற்ற தாயையே மகன் தீவைத்து எரித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பன்னீர்ஊத்து காலனி தெருவைச் சேர்ந்த பொன்னம்பலம் – சுப்புத்தாய் தம்பதியின் மகன் பொன்ராஜ் (31), கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.
மேலும் திருமணமாகாத பொன்ராஜுக்கும் அவரது 67 வயது தாய் சுப்புத்தாய்க்கும் இடையே கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதி மதியம் வேலை முடிந்து வீடு திரும்பிய பொன்ராஜ், மீண்டும் தனது தாயுடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளார்.
இந்தத் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பொன்ராஜ் தனது தாயைத் தாக்கி கீழே தள்ளி, அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துள்ளார். சுப்புத்தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பலத்த தீக்காயமடைந்த இருவரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பலனின்றி சுப்புத்தாய் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தில் பொன்ராஜுக்கும் கைகால்களில் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தேவர்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
