தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், அதிமுக – பாஜக இடையேயான தொகுதிப் பங்கீட்டில் கடும் இழுபறி நீடிக்கிறது. அதிமுக போட்டியிட விரும்பும் அதே முக்கியத் தொகுதிகளை பாஜகவும் கேட்டு வருவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனை இறுதி செய்ய எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ள நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக குறைந்தது 156 இடங்களிலும், பாஜக 30 இடங்களிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாக உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. பாமகவிற்கு 18 தொகுதிகளும், அமமுகவிற்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது. கூட்டணிக்குள் இருக்கும் சிறிய கட்சிகளைத் தங்களது சின்னத்திலேயே போட்டியிட வைக்க இரு பெரிய கட்சிகளும் முயற்சிப்பதால், வேட்பாளர்கள் ‘தாமரை’ அல்லது ‘இரட்டை இலை’ சின்னங்களில் எதைத் தேர்வு செய்வார்கள் என்ற குழப்பம் நீடிக்கிறது.
