தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அரசு நிர்வாகத்தில் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, முதலமைச்சர் விஜய் தினமும் காலை 9:30 மணிக்கு முன்னதாகவே தலைமைச் செயலகத்திற்கு (Secratariat) வந்து தனது பணிகளைத் தொடங்கிவிடுகிறார். முதலமைச்சரே அலுவல் நேரத்திற்கு முன்பாக வந்து கடமையாற்றுவதைக் கண்டு, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலகப் பணியாளர்கள் அனைவரும் காலை 10 மணிக்கு முன்பாக பணிக்கு வர வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, தற்போது பள்ளிக்கல்வித்துறையிலும் பணியாளர்களின் வருகை நேரத்தைக் முறைப்படுத்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பெரும்பாலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தினமும் காலதாமதமாக அலுவலகத்திற்கு வருவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. ஊழியர்கள் உரிய நேரத்திற்குப் பணியில் இல்லாததால், துறை சார்ந்த முக்கியக் கோப்புகளின் நகர்வுகளும் பொதுமக்களுக்கான பணிகளும் பெருமளவில் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, பள்ளிக்கல்வித்துறையின் சார்பு செயலாளர் தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து உயர் அலுவலர்களும், பணியாளர்களும் காலை 10 மணிக்கு முன்னதாகக் கண்டிப்பாக அலுவலகத்திற்கு வந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அலுவலகக் கோப்புகளைக் கையாளும் ரெக்கார்டு கிளார்க் (Record Clerk) மற்றும் அலுவலக உதவியாளர்கள் (Office Assistants) காலை 9:30 மணிக்குள் பணிக்கு வர வேண்டும் என்றும் இந்த உத்தரவில் மிகக் கண்டிப்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
