ஜோலார்பேட்டை அருகிலுள்ள லம்பாடி காலனியைச் சேர்ந்த அல்தாப் உசேன் என்பவர், பெங்களூரில் சுமார் 140 கிராம் தங்க நகைகளைத் திருடி வந்துள்ளார். திருடிய நகைகளைத் திருப்பத்தூரில் உள்ள அருள் என்பவரது கடையில் அடமானம் வைத்துப் பணமாக மாற்றிய நிலையில், கர்நாடக மாநிலப் போலீஸார் அல்தாப்பைக் கைது செய்து விசாரணைக்காகத் திருப்பத்தூர் வந்தனர்.
நகைகளை வாங்கிய கடை உரிமையாளர் அருளையும் போலீஸார் பிடித்துச் சென்றபோது, அவருக்கு ஆதரவாகப் பல வழக்கறிஞர்கள் திரண்டு வந்ததால் காவல் நிலையமே பெரும் பரபரப்புக்குள்ளானது. இதனையடுத்து, ஒரு தனியார் விடுதியில் வைத்து போலீஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே நீண்ட நேரம் ரகசியப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தச் சமரசத்தின் முடிவில் கடை உரிமையாளரை விடுவித்த போலீஸார், திருடனை மட்டும் பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர். விடுதலையான பின் செய்தியாளர்களைச் சந்தித்த அருள், எவ்விதக் குற்ற உணர்ச்சியும் இன்றி கேமராவுக்கு ‘டாட்டா’ காட்டிவிட்டுச் சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. விடுதியில் நடந்த அந்த ரகசியப் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்பது குறித்துத் தற்போது அப்பகுதி மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
