உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் பகுதியில் சமூக ஊடகங்களில் அதிக லைக்குகள் மற்றும் வியூஸ்களைப் பெறுவதற்காக நபர் ஒருவர் தனது மனைவியுடன் ஆபத்தான பைக் ஸ்டண்ட் செய்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அங்குள்ள புகழ்பெற்ற பெல்ஹா தேவி கோவில் காட்டில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
வைரலான அந்த வீடியோவில், அந்த நபர் சுமார் 150 கிலோ எடையுள்ள தனது பல்சர் பைக்கை கைகளில் தூக்குகிறார். அவர் தூக்கிய பிறகு, சுமார் 70 கிலோ எடையுள்ள அவரது மனைவி அந்த பைக்கின் மீது அமர, இருவரின் எடையையும் சேர்த்து அவர் தூக்க முயல்கிறார். புனிதமான கோவில் வளாகத்தில் இத்தகைய ஆபத்தான செயலில் ஈடுபட்டதற்கு அங்கிருந்த பொதுமக்களும் சமூக வலைத்தளப் பயனர்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் 14 ஆயிரத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட அந்த நபரின் இந்த பொறுப்பற்ற வீடியோ வைரலானதை அடுத்து, காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த நபருக்கு அபராதம் விதித்த போலீசார், ஸ்டண்டிற்குப் பயன்படுத்தப்பட்ட பைக்கையும் பறிமுதல் செய்து சீல் வைத்துள்ளனர்.
