இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் விலைவாசி மற்றும் பணவீக்கத்திற்கு மத்தியில், நடுத்தர மற்றும் எளிய மக்களுக்கு பாதுகாப்பான முதலீடு என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. பங்குச்சந்தை போன்ற அபாயம் நிறைந்த முதலீடுகளைத் தவிர்க்க விரும்புவோருக்கு, இந்திய அஞ்சல் துறையின் ‘மாதாந்திர வருமானத் திட்டம்’ (Post Office Monthly Income Scheme – POMIS) ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். இது மத்திய அரசின் நேரடி உத்தரவாதம் கொண்ட திட்டம் என்பதால், நீங்கள் முதலீடு செய்யும் அசல் தொகைக்கு நூறு சதவீதம் பாதுகாப்பு கிடைப்பதோடு, வாழ்வாதாரத்திற்குத் தேவையான நிலையான மாதாந்திர வருமானத்தையும் உறுதி செய்கிறது.
இந்தத் திட்டத்தில் 18 வயது நிரம்பிய எந்தவொரு இந்தியக் குடிமகனும் தனிநபராகவோ அல்லது மூன்று பேர் வரை இணைந்த கூட்டுக் கணக்காகவோ சேர்ந்து பயன்பெற முடியும். தற்போது இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் முதிர்வுக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரையிலும், கூட்டுக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் வரையிலும் முதலீடு செய்ய அனுமதி உண்டு. ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகு, நீங்கள் முதலீடு செய்த முழு அசல் தொகையும் உங்களிடமே திரும்ப ஒப்படைக்கப்படும்.
வருமானக் கணக்கீட்டைப் பொறுத்தவரை, ஒரு தனிநபர் தனது கணக்கில் அதிகபட்ச தொகையான 9 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால், அவருக்கு மாதந்தோறும் 5,550 ரூபாய் வட்டி வருமானமாகக் கிடைக்கும். அதுவே மூன்று பேர் இணைந்த கூட்டுக் கணக்கில் 15 லட்சம் ரூபாயை முதலீடு செய்யும் பட்சத்தில், மாதந்தோறும் தோராயமாக 9,250 ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும். அவசரத் தேவைகளுக்காகக் கணக்கைத் தொடங்கய ஓராண்டிற்குப் பிறகு, குறிப்பிட்ட அபராதத் தொகையைச் செலுத்திவிட்டு கணக்கை இடையில் முடித்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.
ஓய்வு பெற்ற அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாதந்தோறும் நிலையான வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இத்திட்டம் ஒரு பாதுகாப்பான புகலிடமாகும். இந்தத் திட்டத்தில் சேர அஞ்சல் நிலையத்தில் ஒரு சேமிப்புக் கணக்கு இருப்பது அவசியமாகும். உங்கள் பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து, உங்கள் ஓய்வூதியத் தொகை அல்லது சேமிப்பை இதில் முதலீடு செய்வதன் மூலம், எவ்வித ரிஸ்க்கும் இன்றி நிம்மதியான மாதாந்திர வருமானத்தைப் பெறலாம்.
