ஓசூரில் காதல் திருமணம் செய்துகொண்ட மகளை, அவரது குடும்பத்தினரே பெப்பர் ஸ்பிரே (Pepper Spray) அடித்து கடத்திச் சென்ற துணிச்சலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கோவிந்த பிரியா (21), ஓசூரைச் சேர்ந்த சூர்யா (26) என்பவரை கடந்த 7 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், ஓசூரை விட்டு வெளியேறித் தங்கள் சொந்த ஊருக்கே சென்றுவிட்டனர்.
சொந்த ஊரில் உறவினர்களின் கேள்விகளால் ஆத்திரமடைந்த கோவிந்த பிரியாவின் தாய் சகுந்தலா மற்றும் அவரது சகோதரர்கள், மீண்டும் ஓசூர் வந்து மகளைக் கடத்தத் திட்டமிட்டனர். நேற்று பிற்பகல் சூர்யாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அவர்கள், அங்கிருந்தவர்கள் மீது திடீரென பெப்பர் ஸ்பிரே அடித்து நிலைகுலையச் செய்தனர். கண் எரிச்சலில் அவர்கள் தவித்துக் கொண்டிருந்ததைப் பயன்படுத்தி, கோவிந்த பிரியாவை வலுக்கட்டாயமாக ஒரு காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். இச்சம்பவம் குறித்துச் சூர்யா அளித்த புகாரின் பேரில், ஓசூர் அட்கோ போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர்.
போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்து கடத்தல்காரர்களைத் தீவிரமாகப் பின்தொடர்ந்தனர். இறுதியில், கர்நாடக மாநிலம் ராமோஅள்ளி பகுதியில் மறைந்திருந்த கடத்தல் கும்பலைச் சுற்றி வளைத்து, கோவிந்த பிரியாவைப் பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பாகப் பெண்ணின் தாய், சகோதரர்கள் மற்றும் கார் ஓட்டுநர் என நான்கு பேரைக் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஒருவரைத் தேடி வருகின்றனர். சொந்த மகளையே சினிமா பாணியில் பெப்பர் ஸ்பிரே அடித்துக் கடத்திய இந்தச் சம்பவம் ஓசூர் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
