கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள கங்காவதி நகரில் கடந்த சில நாட்களாக விசித்திரமான திருட்டுச் சம்பவம் அரங்கேறி வருகிறது. அப்பகுதியிலுள்ள சிபிஎஸ் குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவு நேரங்களில் புகுந்து வரும் ஒரு மர்ம நபர், வீடுகளின் சுற்றுச்சுவர்களைத் தாண்டி குதித்து, துணிக்காயப்போடும் கம்பிகளில் இருக்கும் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் குறிவைத்துத் திருடிச் செல்கிறார். வீட்டில் இருக்கும் நகை அல்லது பணத்தைப் பொருட்படுத்தாமல், பெண்களின் ஆடைகளை மட்டும் திருடும் இந்த நபரின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபர் உள்ளாடைகளைத் திருடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. இது ஏதேனும் ஒரு சைக்கோ நபரின் வேலையாக இருக்கலாம் என்று அஞ்சும் அப்பகுதிப் பெண்கள், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவும், துணிகளை வெளியே காயப்போடவும் அச்சப்படுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கங்காவதி நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மர்ம நபரின் இந்த விசித்திரப் பழக்கம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
