தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கும். உதாரணத்திற்கு ஒரு நடிகர் ஆக்ஷனில் கலக்குவார், ஒருவர் நகைச்சுவையில் கலக்குவார், ஒருவர் ஹூமரில் கலக்குவார். அப்படி தொடர்ந்து நடிப்பவர்கள், திடீரென தங்களது பாணியை மாற்றும் போது அது வெற்றி பெறுமா? என்பது சந்தேகம் தான். உதாரணத்திற்கு சந்தானத்தை கூறலாம். நகைச்சுவையில் கலக்கியவர், திடீரென ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கி அதனால் வெற்றி அடைந்தார் என்றால் அது சந்தேகம் தான். மீண்டும் காமெடி ஹீரோவாக கலக்கத் தொடங்கினார் சந்தானம்.
அப்படி சினிமாவில் ஸ்டைலுக்கு பெயர் போனவர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அத்தனை வருடங்களாக தனது ஸ்டைலான நடிப்பால் மிரட்டியவர், திடீரென தனது அத்தனை ஸ்டைலையும் மறைத்து வேறுஒரு மாதிரியாக நடித்திருந்தார். அவரை அப்படி ஒரு கோணத்தில் ரசிகர்கள் ரசிப்பார்களா என்ற சந்தேகம் நிச்சயம் யாருக்கேனும் வந்திருக்கும். ஆனால் அப்படத்தை கொண்டாடித் தீர்த்தனர் ரசிகர்கள். அப்படியான படம் ஆறிலிருந்து அறுபது வரை. பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1979-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆறிலிருந்து அறுபது வரை.
அத்தனை ஆண்டுகளாக ஸ்டைலில் கலக்கிக் கொண்டிருந்தவர், அடக்க ஒடுக்கமாக, ஒட்டுமொத்த குடும்பத்தின் பாரத்தை தன் தோள் மீது ஏற்றி, தனது தம்பிகள், தங்கையை படிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்புவார் ரஜினிகாந்த். ஆனால் அவர்கள் மூவரும் அண்ணனின் கஷ்டத்தை தெரிந்து கொள்ளாமல் ஆளுக்கு ஒரு திசையில் செல்ல தட்டுத் தடுமாறி வறுமையின் உச்சத்திற்கே சென்று மீண்டும் வாழ்க்கையில் உயர்ந்து நிற்பார் ரஜினி. அதுவரை அவரை வசதி இல்லாதவர் என ஒதுக்கி வைத்த தம்பிகள் தங்கை மீண்டும் அவரை வந்து ஒட்டிக் கொள்ள, மனைவியை இழந்து வெறும் பணம், புகழைக் மட்டும் வைத்து சந்தோஷமாக வாழ முடியாமல் இறுதியில் தனி மரமாய் இறந்து போவார் ரஜினி.
ரஜினியின் நடிப்புத் திறமையை இப்படம் பறைசாற்றியது எனலாம். ரஜினி, படாபட் ஜெயலட்சுமி, சோ, சங்கீதா, சக்கரவர்த்தி, ஜெயா முதலானோர் நடிப்பில் இப்படத்தில் சோகம், குடும்பச் சுமை, றெக்கை முளைத்ததும் பறந்துவிடுகிற உறவு, வறுமை, வெறுமை, இயலாமை, கோபம், ஆத்திரம், அழுகை என படம் முழுக்க நடிப்பில் அசத்தியிருப்பார் ரஜினி. முதலில் ரஜினிக்கு இந்தப் படத்தின் மீது பெரிய சந்தேகம் இருந்ததாம். ‘சரியா வருமா சரியா வருமா’என்று கேட்டுக்கொண்டே இருந்தார். ‘ஓடாது போல’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாராம்.
தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் உத்வேகத்தால் நடித்துமுடித்தாராம் ரஜினி. ரஜினியின் நடிப்பில் இப்படம் என்றுமே பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய படமாக அமைந்தது. இப்படம் வெளியாகி 41 ஆண்டுகள் ஆகிறது.