சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, புதுச்சேரி அரசியலில் திமுக மற்றும் பாஜக இணைந்து காங்கிரஸை திட்டமிட்டு ஒழித்துவிட்டதாக அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்தார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கள அரசியல் தெரியாது என்றும், அவர் டெல்லி லாபியையும் திமுகவையும் மட்டுமே நம்பி இருந்து ஏமாந்துவிட்டதாகவும் சாடினார். ஜெகத்ரட்சகன் மீதான அமலாக்கத்துறை வழக்கை வைத்து பாஜக அவரை அங்கு அனுப்பியதாகவும், இதனால் அங்கு காங்கிரஸ் தற்போது நடுத்தெருவில் நிற்பதாகவும், அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் தவெக வாசலில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தலைவரான ப.சிதம்பரத்தையும் கடுமையாக விமர்சித்த ஆதவ் அர்ஜுனா, அவர் காங்கிரஸை தமிழகத்தில் வளரவிடாமல் தடுத்து வருவதாகக் கூறினார். இன்னும் 2 நாட்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியமாக போகிறார்கள். திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி என்பது ஒரு ‘கட்டாயக் கல்யாணம்’ போன்றது என்றும், ராகுல் காந்திக்கு விஜய் மீது அன்பு இருந்தும், இங்குள்ள வயதான காங்கிரஸ் தலைவர்கள் ‘பெட்டி’ வாங்கிக்கொண்டு கட்சியை அடமானம் வைத்துவிட்டதாகத் தொண்டர்கள் புலம்புவதாகவும் தெரிவித்தார். இன்னும் இரண்டு நாட்களில் காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியமாகப் போவது உறுதி என்றும் அவர் சவால் விடுத்தார்.
திமுக தனது கூட்டணிக் கட்சிகளை நடத்தும் விதம் குறித்துப் பேசிய அவர், பாஜகவில் இருந்து வந்த தேமுதிகவுக்கு 10 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா இடமும் வழங்கிய திமுக, 8 ஆண்டுகளாகக் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட்களுக்கு வெறும் 5 இடங்களை மட்டுமே ஒதுக்கி அசிங்கப்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்குப் பிறகு திமுகவையும், டெல்லி அதிகாரத்தையும் ஒரே நேரத்தில் துணிச்சலாக எதிர்க்கும் ஒரே தலைவர் விஜய் மட்டும்தான் என்று முழங்கிய அவர், இதே நிலை நீடித்தால் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் காணாமல் போய்விடும் என்று எச்சரித்தார்.
