தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வேட்பாளர்களின் சொத்து விவரங்களைச் சரிபார்க்கும் நடைமுறை தொடங்கப்படும் என்று வருமான வரித்துறை (IT) சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சரிபார்ப்பு நெறிமுறைகளின்படி, இந்தச் செயல்பாடுகளை 150 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் வருமான வரித்துறை நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
வருமான வரித்துறையின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் குறித்த இந்தச் சரிபார்ப்பு நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உதயநிதி ஸ்டாலின் தொடர்பான வழக்கில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
