கண்ணூர் மாவட்டம் ராமந்தலி கிராமத்தில், ஒரு நபர் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தனது தாயாருடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திங்கள்கிழமை இரவு, இவர்களது வீட்டின் கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் உடல்களைக் கைப்பற்றினர். கலாதரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படி, குழந்தைகள் கலாதரனுடன் இருந்த நிலையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் குழந்தைகளை மீண்டும் மனைவியிடம் ஒப்படைக்க வேண்டிய சூழல் இருந்துள்ளது.
குழந்தைகளைத் திருப்பி அனுப்ப விரும்பாத கலாதரன், தனது குழந்தைகளுக்கு பூச்சிக்கொல்லி கலந்த பாலைக் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் தனது தாயாரும் அதே விஷத்தை அருந்தித் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டின் ஒரு அறையிலிருந்து விஷம் கலந்த பால் பாட்டிலை போலீசார் மீட்டுள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையும் குழந்தைகள் விஷம் அருந்தியதால் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. மனைவியிடம் குழந்தைகளை ஒப்படைக்க வேண்டிய கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த விபரீத முடிவு அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
