ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்துச் சுமார் 2 முதல் 4 நாட்கள் வரை தங்கியிருந்த வாடிக்கையாளர் ஒருவர், காலி செய்துவிட்டு (Check-out) கிளம்பியுள்ளார். அவர் சென்ற பிறகு, வழக்கம்போல் அறையைச் சுத்தம் செய்வதற்காக ஹோட்டல் ஊழியர்கள் அறைக்குள்ளே சென்றுள்ளனர்.
அங்கே கட்டிலில் போர்வைக்கு நடுவே அச்சு அசலாக ஒரு மனிதனின் சடலம் கிடப்பது போன்ற வடிவம் இருப்பதைப் பார்த்து ஊழியர்கள் உறைந்து போயினர். மேலும், அந்த வடிவத்தின் காதுக்கு அருகே செல்போன் ஒன்று வைக்கப்பட்டிருந்ததால், யாரோ கொலையுண்டு சடலமாகக் கிடக்கிறார்கள் என நினைத்து ஊழியர்கள் அலறியடித்து ஓடிச் சென்று ஹோட்டல் மேனேஜர் மற்றும் உரிமையாளருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனால் அந்த ஹோட்டல் முழுவதும் பெரும் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. ஆனால், அச்சத்துடன் அருகில் சென்று தீவிரமாக ஆய்வு செய்து பார்த்தபோதே உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அது மனித சடலம் அல்ல; தலையணைகள் மற்றும் பொருட்களை வைத்து மனித உருவம் போலச் செய்யப்பட்டுப் போர்வையால் மூடி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அறையைக் காலி செய்வதற்கு முன் ஊழியர்களைப் பயமுறுத்தவே அந்த நபர் இப்படி ஒரு விபரீத வேலையைச் செய்துவிட்டுச் சென்றது தெரியவந்தது.
