இந்தியாவின் பெருநகரங்களில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் குறித்த புதிய விவாதத்தை குருகிராம் நகரத்தைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் முஸ்கான் மிட்டல் சமூக ஊடகங்களில் ஏற்படுத்தியுள்ளார். தற்போதைய காலகட்டத்தில் பெருநகரங்களில் வாங்கும் 1 லட்சம் ரூபாய் மாதச் சம்பளமானது, கடந்த காலத்தின் 30,000 ரூபாய் சம்பளத்திற்கு இணையானதாகவே மாறிவிட்டது என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். நடுத்தர வர்க்கத்தினர் ஆடம்பரமாகச் செலவு செய்யாவிட்டாலும், அத்தியாவசியத் தேவைகளின் விலை உயர்வால் அவர்களது வாங்கும் திறன் பெருமளவு குறைந்துள்ளதை இது காட்டுகிறது என்று அவர் வாதிடுகிறார்.
இந்தக் கருத்தை விளக்குவதற்காக, மாதம் 1 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் ஒருவரின் மாதிரி வரவு-செலவுப் பட்டியலை அவர் பகிர்ந்துள்ளார். அதன்படி, வாடகைக்கு ரூ25,000, மளிகைப் பொருட்களுக்கு ரூ10,000, காப்பீடு மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு ரூ7,000, குடும்ப உதவிக்கு ரூ5,000 மற்றும் போக்குவரத்து, மின்சாரம், உணவகம், பொழுதுபோக்கு போன்ற இதரத் தேவைகளுக்கும் தனித்தனியே நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. இவற்றுடன் எதிர்காலப் பாதுகாப்புக்காக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு ரூ20,000 மற்றும் அவசரக் காலச் சேமிப்பிற்கு ரூ15,000 ஒதுக்கிய பிறகு, மாத இறுதியில் கையில் தன்னிச்சையாகச் செலவழிக்க ஒரு ரூபாய்கூட மிஞ்சுவதில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
https://www.instagram.com/reel/DaFdqBlOiVp/?utm_source=ig_web_button_share_sheet
முஸ்கான் மிட்டலின் இந்தப் பதிவு குருகிராம், மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வாழும் ஐடி ஊழியர்கள் மற்றும் இளம் தொழில்முறை வல்லுநர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வீடு, போக்குவரத்து, மருத்துவம் மற்றும் அன்றாடப் பொருட்களின் அதீத விலை உயர்வால் தங்களின் சம்பள மதிப்பு குறைந்துவிட்டதாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதங்கத்தைப் பகிர்ந்து வருகின்றனர். இன்றைய சூழலில் ஆறு இலக்கச் சம்பளம் வாங்கினாலும், முன்பு போல் நிம்மதியான மற்றும் பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ முடிவதில்லை என்ற நிதர்சனத்தை இந்த விவாதம் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
