குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் உப்லேட்டா (Upleta) பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். இது குறித்து அவரது தந்தையே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், அந்தப் பெண் ராஜ்கோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை மீட்ட போலீஸார் விசாரணை நடத்தியபோது, தான் வீட்டை விட்டு வெளியேறியதற்கான அதிர்ச்சிகரமான காரணத்தை அவர் வெளிப்படுத்தினார்.
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் வீழ்ந்த நிலையில், தனது தந்தையே தன்னைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்தார். தான் சத்தமிடும்போது வெளியில் யாருக்கும் தெரியாமல் இருக்க, தந்தை ஆபாசப் படங்களை அதிக சத்தத்துடன் ஒலிக்கச் செய்வார் என்றும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார். மேலும், தந்தையின் இந்த அட்டூழியத்திற்கு அவரது 17 வயது மருமகளும் (சகோதரரின் மகள்) கடந்த 7 ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, மின்சார ஊழியராகப் பணியாற்றும் மாற்றுத்திறனாளியான அந்தத் தந்தையை போலீஸார் கைது செய்து போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் தாயார் தற்போது புற்றுநோயின் நான்காம் நிலையில் இருப்பதால், அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
