சமூக வலைத்தளமான ‘X’ தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற ஒரு லாரியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இந்த பதைபதைக்க வைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அதிவேகமாக வந்த மற்றொரு லாரி, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த லாரி ஓட்டுநர் முந்திச் செல்ல முயன்ற அதே வேளையில், எதிர்பாராதவிதமாக எதிர்த்திசையிலும் ஒரு லாரி நேருக்கு நேர் வந்துள்ளது. பொதுவாக இதுபோன்ற சமயங்களில் ஓட்டுநர்கள் வேகத்தைக் குறைத்து பிரேக் அடிப்பதே வழக்கம். ஆனால், இந்த ஓட்டுநரோ பிரேக் அடிக்காமல், எதிரே வந்த லாரிக்கும் முன்னால் சென்ற லாரிக்கும் இடைப்பட்ட மிகக் குறுகிய கேப்பில் தனது லாரியை அசுர வேகத்தில் செலுத்தினார். அப்போது லாரியின் இடப்பக்க மற்றும் வலப்பக்க சக்கரங்கள் அடுத்தடுத்து காற்றில் தூக்கியபடி திக் திக் நிமிடங்களுடன் அந்த லாரி அதிர்ஷ்டவசமாக கவிழாமல் தப்பியது.
சினிமா பாணியில் அமைந்த இந்த நிஜ வாழ்க்கை வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியடைந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு நொடி தாமதித்திருந்தாலும் ஓட்டுநரின் உயிர் போயிருக்கும் என்றும், இது போன்ற பொறுப்பற்ற ஓட்டுநர்களால் தான் சாலையில் பெரும் விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றும் நெட்டிசன்கள் ஓட்டுநரை கடுமையாக சாடி வருகின்றனர். அதே வேளையில், இவ்வளவு ஆபத்தான சூழலிலும் லாரி கவிழாமல் நேராக நின்றதால், அது ஓட்டுநருக்கு கிடைத்த ‘மறுபிறவி’ என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
