உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில், பழுதடைந்த தண்ணீர் தொட்டியின் உச்சியில் 15 மணி நேரம் உயிருக்காகப் போராடிய இரண்டு சிறுவர்களை இந்திய விமானப்படை (IAF) அதிரடியாக மீட்டுள்ளது. சனிக்கிழமை மதியம் விளையாடச் சென்ற ஐந்து சிறுவர்களில், ஏணி உடைந்ததில் ஒருவர் உயிரிழந்தார், இருவர் படுகாயமடைந்தனர். ஆனால், பவன் மற்றும் கல்லு என்ற இரு சிறுவர்கள் சுமார் 60 அடி உயர தொட்டியின் உச்சியில் சிக்கிக்கொண்டனர். கனமழை மற்றும் போதிய வசதிகள் இல்லாததால் மாநில பேரிடர் மீட்புப் படையினரால் (SDRF) இரவில் அவர்களை மீட்க முடியாமல் போனது, அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இரவு முழுவதும் அந்தச் சிறுவர்கள் தொட்டியின் உச்சியில் தவித்த நிலையில், மாவட்ட நிர்வாகம் ட்ரோன்கள் மூலம் அவர்களுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கி தைரியம் அளித்தது. தரைவழியாக மீட்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அதிகாரிகள், இந்திய விமானப்படையின் உதவியை நாடினர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கோரக்பூரிலிருந்து வந்தடைந்த ‘Mi-17 V5’ ரக ஹெலிகாப்டர், மிகச் சவாலான வானிலையிலும் துணிச்சலாகச் செயல்பட்டு, அந்த இரு சிறுவர்களையும் ஒருவர்பின் ஒருவராகப் பாதுகாப்பாக மீட்டது.
இந்தச் மீட்புப் பணியை எதிர்க்கட்சித் தலைவர் மாதா பிரசாத் பாண்டே நேரில் ஆய்வு செய்து, உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுவர்களைத் தேவதூதர்களைப் போல வந்து மீட்ட விமானப்படை வீரர்களின் திறமையையும், அர்ப்பணிப்பையும் கண்டு அங்கிருந்த மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், இந்திய விமானப்படையின் வீரத்திற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
View this post on Instagram
