சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் மனிதர்களை மட்டுமின்றி, விலங்கினங்களையும் எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதற்குச் சான்றாக ஒரு நெகிழ்ச்சியான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒரு சாலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பரபரப்பான சாலையைக் கடக்க முயன்ற நாகப்பாம்பு ஒன்று, கடுமையான வெயிலின் காரணமாகச் சாலை சூடாகிவிட்டதால், மேற்கொண்டு செல்ல முடியாமல் தவித்தக் காட்சி பலரையும் உற்றுநோக்க வைத்துள்ளது.
அந்தக் காணொளியில், நாகப்பாம்பு ஒன்று தன் வாயில் ஒரு எலியைப் பிடித்துக்கொண்டு சாலையைக் கடக்க முற்படுகிறது. ஆனால், கத்தரி வெயிலால் தார்ச்சாலை தணலாகக் கொதித்துக் கொண்டிருந்ததால், பாம்பினால் அதன் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சூடு தாங்காமல் தவித்த அந்தப் பாம்பு, சாலையின் மறுபக்கத்திற்குச் செல்ல முடியாமல் பாதியிலேயே திணறி, இறுதியில் வெப்பத்தில் இருந்து தப்பிக்க அருகில் இருந்த மரத்தின் நிழலை நோக்கி வேகமாக ஓடிச் சென்று தஞ்சமடைகிறது. இந்தத் தவிப்பானக் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகின்றது.
https://www.instagram.com/reel/DY6HmzmJHRL/?utm_source=ig_web_copy_link
சமீபகாலமாக அதிகரித்து வரும் காடழிப்பு மற்றும் கடுமையான காலநிலை மாற்றம் காரணமாக, பாம்புகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தங்களின் வாழ்விடங்களை இழந்து மக்கள் வாழும் பகுதிகளை நோக்கி வேகமாக வரத் தொடங்கியுள்ளன என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. வாயில் இரை இருந்தும், இயற்கையின் சுட்டெரிக்கும் வெப்பத்திற்கு முன்னால் ஒரு விஷப்பாம்புகூட திகைத்து நிற்கும் இந்தக் காணொளி, தற்போதைய புவி வெப்பமயமாதலின் தீவிரத்தை மக்களுக்குப் புரிய வைக்கும் ஒரு விழிப்புணர்வுப் பதிவாகவும் மாறியுள்ளது.
