பவானி டூ துபாய்-க்கு அரசு பஸ்ஸா..? ₹150 டிக்கெட்டுக்கு ₹10,000 கட்டணமா..? பேருந்தில் நடந்த பகீர் சம்பவம்.. பின்னணி என்ன..?

By Swetha on ஆனி 10, 2026

Spread the love

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ‘பவானி பைபாஸ் டூ துபாய்’ பேருந்து டிக்கெட் குறித்த செய்தி முற்றிலும் ஒரு தொழில்நுட்பக் குளறுபடியாகும். கோயம்புத்தூர் – பெங்களூரு வழித்தட அரசுப் பேருந்தில், தாமோதரன் என்பவர் பவானி பைபாஸிலிருந்து ஓசூர் செல்வதற்காக ஏறியுள்ளார். பவானியிலிருந்து ஓசூருக்கான உண்மையான கட்டணம் 150 ரூபாய் மட்டுமே. ஆனால், நடத்துநர் வழங்கிய டிக்கெட்டில் இறங்குமிடம் “பவானி பைபாஸ் டு துபாய், UAE” என்றும், அதற்கான கட்டணம் “ரூ. 10,000” என்றும் தவறாக அச்சிடப்பட்டிருந்ததால் பயணி அதிர்ச்சியடைந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இது யாரோ திட்டமிட்டு செய்த குறும்போ அல்லது பிராங்கோ அல்ல என்றும், டிக்கெட் அச்சிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட மென்பொருள் பிழை காரணமாகவே இவ்வாறு தவறாக அச்சிடப்பட்டுள்ளது என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், இந்தத் தொழில்நுட்பப் பிழையால் பயணிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், பயணிகளிடம் அவர்கள் பயணித்த தூரத்திற்கான சரியான கட்டணம் ரூ. 150 மட்டுமே வசூலிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

   

இருப்பினும், இந்த விநோதமான டிக்கெட்டின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மீம்களாகவும், கமெண்ட்டுகளாகவும் வெளியாகி பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது. ‘வெற்றி கொடி கட்டு’ திரைப்படத்தில் வரும் ‘துபாய் பஸ் ஸ்டாண்ட்’ நகைச்சுவைக் காட்சியுடன் ஒப்பிட்டும், தமிழக அரசை நக்கல் செய்தும் நெட்டிசன்கள் பலவாறு பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், அரசுப் பேருந்தில் துபாய்க்கு டிக்கெட் வழங்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம் முற்றிலும் தவறான மற்றும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட தகவல் என்று தமிழக அரசின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்புக் குழு விளக்கம் அளித்துள்ளது.