பெங்களூரு தேவனஹள்ளி சர்வதேச விமான நிலையத்தில் அழுகிய தக்காளி மற்றும் ஆபாசப் படங்களைக் கொண்ட ஒரு மர்மமான பார்சலை அனுப்பிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நெதர்லாந்து நாட்டு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதான இந்த நபர், விமான நிலைய மேலாளருக்கு இந்த வினோதமான பார்சலை அனுப்பியதை ஒப்புக்கொண்டார்.
மேலும் காவல்துறையினரின் விசாரணையில், தனது குடும்பத்திற்கு ஏற்படவிருந்த ஒரு பெரிய ‘துரதிர்ஷ்டத்தை’ அல்லது பேரழிவைத் தடுப்பதற்காகவே இத்தகைய செயலில் ஈடுபட்டதாக அவர் விசித்திரமான விளக்கத்தை அளித்துள்ளார். இந்த சம்பவம் விமான நிலைய அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதனால் விசாரணையில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர் மீது பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் ஆபாசப் பொருட்களை விநியோகித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் வசித்து வரும் அவர், தனது வினோதமான நம்பிக்கையின் காரணமாகவே இந்த காரியத்தைச் செய்ததாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
தற்போது அவரை நீதிமன்றக் காவலில் எடுத்துள்ள காவல்துறையினர், இச்சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா அல்லது இது முழுக்க முழுக்க மூடநம்பிக்கையினால் செய்யப்பட்ட செயலா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
