கிழக்கு லண்டனின் இல்போர்ட் ஹை ரோட்டில் உள்ள ஒரு கடையின் மேல் மாடி ஜன்னல் விளிம்பில், 3 வயது சிறுமி ஒருவர் எதிர்பாராதவிதமாக தவறி விழும் நிலையில் ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருந்தார். இதை கடையின் கீழே நின்று பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். ஆபத்தை உணர்ந்த ஒரு பெண் உடனடியாக கீழ்ப்புற ஜன்னல் வழியாக மேலே ஏற முயன்றார். அதே நேரத்தில், அங்கு நின்றிருந்த ஒரு போலீஸ்காரரும், ஜெசில் என்ற இந்திய வாலிபரும் சிறுமிக்கு நேர் கீழே தயாராக நின்று கொண்டனர்.
அடுத்த சில நொடிகளில் அந்தச் சிறுமி ஜன்னலில் இருந்து கீழே விழுந்தபோது, கீழே அலர்ட்டாக நின்று கொண்டிருந்த ஜெசில் சாமர்த்தியமாக அவளைத் தன் கைகளில் தாங்கிப் பிடித்துக் காப்பாற்றினார். இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தை நேரில் பார்த்து பதற்றத்தில் இருந்த பொதுமக்கள், சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டதைக் கண்டு ஆரவாரத்துடன் கைதட்டி தங்களது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய ஜெசில், அங்குள்ள ஒரு உணவகத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தில் இருந்து தப்பிய சிறுமியின் தந்தை, தனது மகளைக் காப்பாற்றிய ஜெசிலையும், அந்தப் போலீஸ்காரரையும் “அற்புதமான நாயகர்கள்” என்று நெகிழ்ச்சியோடு பாராட்டினார். இதற்கிடையே, தக்க சமயத்தில் செயல்பட்டு சிறுமியின் உயிரைக் காத்த இந்திய வாலிபரான ஜெசிலுக்கு சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிகின்றன.
