மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும் தொடர் வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், தனது மருத்துவச் சான்றிதழ்களை ஏற்றுக் கொள்ளாமல் உயர் அதிகாரிகள் தொடர்ந்து களப் பணியிலேயே ஈடுபடுத்துவதாகக் கூறி வெளியிட்டுள்ள கண்ணீர் காணொளி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து காரணமாக ஒரு வருடம் படுக்கையில் இருந்து மீண்டு வந்த அவரிடம், மருத்துவர்களின் அறிவுரையை மீறித் தொடர்ந்து கடினமான களப் பணிகள் கட்டாயப்படுத்தப்படுவதுடன், கடந்த நான்கு மாதங்களாக அவரது ஊதியம் அசோகநகர் எஸ்பி ராஜீவ் மிஸ்ரா அவர்களால் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உயர் அதிகாரிகளின் தொடர்ச்சியான புறக்கணிப்பு மற்றும் ஊதிய முடக்கத்தால் உச்சக்கட்ட மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள பூஜா ரகுவன்ஷி, தனது மகளுக்காக மட்டுமே உயிரைக் பிடித்துக் கொண்டிருப்பதாகக் கூறி தற்கொலை எண்ணம் தோன்றும் அளவுக்கு விரக்தியடைந்துள்ளார். ஒரு காவல் துறையைச் சேர்ந்தவரே இத்தகைய அநீதிகளையும் மன அழுத்தத்தையும் எதிர்கொள்ளும்போது, சாதாரண பொதுமக்களின் நிலைமை எத்தகைய துயரமானதாக இருக்கும் என்ற நியாயமான கேள்வி இந்தச் சம்பவத்தின் மூலம் எழுந்துள்ளது.
எனவே, மத்தியப் பிரதேச அரசும் மாநிலக் காவல் துறையும் உடனடியாகத் தலையிட்டு, பூஜா ரகுவன்ஷிக்கு முடக்கப்பட்ட ஊதியத்தை உடனடியாக விடுவிப்பதோடு, அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு களப் பணியில் இருந்து விடுவித்து அலுவலகப் பணியை வழங்கத் தேவையான விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
