உத்தரகாண்ட் மாநிலம் ஜஸ்பூர் பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது மனதை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 9 வயதுச் சிறுவன் ஒருவனும், 11 வயதுச் சிறுவன் ஒருவனும் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களது ‘ஷட்டில் காக்’ எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த சாக்கடையில் விழுந்துள்ளது.
இது தொடர்பாக இரு சிறுவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த 11 வயதுச் சிறுவன் திடீரெனத் தான் வைத்திருந்த கத்தியால் 9 வயதுச் சிறுவனின் மார்பில் பலமாகக் குத்தியுள்ளான். கத்திக் குத்துப் பட்டுக் காயமடைந்த சிறுவன், உடனடியாக ரத்தக் காயங்களுடன் அருகில் இருந்த மெடிக்கல் ஷாப்பிற்கு முதலுதவி கேட்டு ஓடிச் சென்றுள்ளான்.
ஆனால், மெடிக்கல் ஷாப்பிற்குள்ளேயே அச்சிறுவன் மயங்கிச் சுருண்டு விழுந்துள்ளான். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றித் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
