விருதுநகர் மாவட்டம், பாலையம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரும், செவல்பட்டியைச் சேர்ந்த வாசக தேவியும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு மதுபோதையில் கணவர் தொந்தரவு செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான வாசக தேவி, அவரைப் பிரிந்து செவல்பட்டியில் உள்ள தனது தாய் சாந்தியின் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் மதுபோதையில் மாமியார் வீட்டிற்குச் சென்ற சிவா, தனது மனைவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட தகராறில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார் சாந்தியையும், மைத்துனர் சாமி முருகனையும் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த 55 வயதுடைய சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, பலத்த காயமடைந்த சாமி முருகன் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்த சூலக்கரை போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதுடன், தலைமறைவாக இருந்த சிவாவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
