மும்பையில் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு தயாராகி வரும் 17 வயது மாணவி ஒருவர், தனது தனியார் பயிற்சி மையத்தில் பணிபுரியும் 33 வயது ஆசிரியரால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளார். கடந்த ஜூன் மாதம் அந்த மாணவி வகுப்பறையில் தனியாகப் படித்துக் கொண்டிருந்தபோது, ஆசிரியர் தன்னிடம் வலுக்கட்டாயமாக காதலைத் திணித்து, திருமண ஆசையை வெளிப்படுத்தியதோடு தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த மாணவி, உடனடியாக அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகும் அந்த ஆசிரியரின் அத்துமீறல்கள் நிற்கவில்லை. நடப்பு மாதத்தில் அந்த மாணவி மீண்டும் பயிற்சி வகுப்பிற்குச் சென்றபோது, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மறுபடியும் அவரிடம் உடல்ரீதியாக நெருங்க முயற்சி செய்துள்ளார். தொடர்ச்சியாக நடந்த இந்த உடல் மற்றும் மன உளைச்சலைத் தாங்க முடியாத அந்த சிறுமி, நடந்த விவரங்கள் அனைத்தையும் தனது பெற்றோரிடம் தைரியமாகத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் ஷாஹு நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல்துறையினர் குறிப்பிட்ட ஆசிரியரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர் மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவுகள் மற்றும் சிறுவர் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
