தமிழக சட்டமன்றத்தில் சமீபத்தில் நடந்த விவாதத்தின் போது, முதல்வர் விஜய்யின் எச்சரிக்கைக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “ஜோசியக்காரன் சொன்னால் தான் கோப்புகளை திறந்து பார்த்து நடவடிக்கை எடுப்பீர்களா?” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், “ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் ஏற்கனவே தமிழ்நாடு பார்த்துவிட்டது” எனக் குறிப்பிட்டார். இந்த கருத்து மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை மறைமுகமாக விமர்சித்து பேசப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
ஆனால், கலைஞர் கருணாநிதி மஞ்சள் துண்டு அணியத் தொடங்கியதற்குப் பின்னால் ஜோசியமோ அல்லது மூடநம்பிக்கையோ காரணம் அல்ல; அதக்குப் பின்னால் ஒரு மருத்துவக் காரணமும், சமூக நீதிக்கான வரலாற்று நிகழ்வுமே அமைந்திருந்தன. 1994 ஆம் ஆண்டு கலைஞர் அவர்களின் உமிழ்நீர்ச் சுரப்பியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கன்னத்தில் சிறிய வீக்கம் ஏற்பட்டது. அந்தப் பகுதியை எப்போதும் கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் தன் கழுத்தைச் சுற்றி சால்வை அணியத் தொடங்கினார்.
அதே காலகட்டத்தில், 1989-இல் திமுக ஆட்சியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பிரிவை உருவாக்கி, அதில் வன்னியர் சமூகத்தினரையும் சேர்த்து 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்காக வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கலைஞருக்கு அன்போடு ஒரு மஞ்சள் துண்டை அணிவித்தார். அந்த துண்டு அவருக்கு மிகவும் பிடித்துப்போகவே, மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அதைத் தொடர்ந்து அணிய ஆரம்பித்தார். தன் மீது எத்தனையோ அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், இறுதிவரை அவர் அந்த மஞ்சள் துண்டை அணிவதைக் கைவிடவே இல்லை.
